அரேபிய தேசத்தில் எண்ணெய்
கிணறுகள் ஆழமில்லை.
அதை விட அதிக ஆழம்
எங்கள் மனங்களே...
சுள்ளென சுடும் கடும் வெயிலும்
சுருக்கென குத்தும் உறைந்த
குளிரும் தாங்க முடியவில்லை தான்
என்ன செய்ய..?
தாங்கச் சொல்கிறது குடும்ப சூழ்நிலை.
விமானத்தில் பயணிப்பது மகிழ்ச்சியாய்
இருக்கும் என்று தான் நினைத்திருந்தேன்.
ஆனால் அதில் பயணிக்கிற யாரும்
மகிழ்ச்சியாய் இல்லை என்பதை
உணர்ந்தேன்.
நானும் பயணித்தபோது...
கல்நெஞ்சுகாரனாகவே இருந்தாலும் கூட
கண்ணீரை விடாமல் இருக்க முடிவதில்லை
விமான நிலைய வாசலில் வைத்து
பிரிவை சந்திக்கிற போது...
கடல் தாண்டி உடல்
பயணப்பட்டு வந்த போதும்
ஏனோ பாழாய் போன மனம்
மட்டும் ஊர் நினைவை
விட்டு பயணப்படுவதில்லை.
தொலைக்காட்சி வழி
கனவின் வழி
கற்பனை வழி
பிறர் சொல்லக்கேட்டு
நான் அறிந்த வெளிநாடு எல்லாம்
மாயை என இங்கு முதல் முதலாய்
காலடி வைத்ததும் புரிந்தது.
புரியாத பாஷைகள்
அறியாத வீதிகள்
கண்டிராத மனிதர்கள்
பழக்கமில்லாத காலநிலை
என பயமுறுத்திய அத்தனையும்
பழகிப்போனது இப்போது...
உலகத்தின் எல்லா பொருட்கள்
இங்கிருந்தாலும்,
படுக்கைக்கே காபி கொண்டுவரும்
அம்மா,
செலவுக்கு காசு தரும்
தந்தை,
என் புதுச்சட்டையை போட்டு பார்க்கும்
தங்கை,
அடிக்கடி சண்டை போட்டு பார்க்கும்
தம்பி,
ஏதாவது காரணம் சொல்லி அடிக்கடி பார்க்க
வரும் அத்தை மகள்,
என்று மனசுக்கு சந்தோஷம் தரக்கூடிய
இவர்கள் யாரும் இங்கில்லை.
பண்டிகையின் போது எல்லாம்
உதடுகள் சந்தோஷமாய் வாழ்த்து சொல்லும்
ஆனால்
கண்களில் நீர் மட்டும்
வழிந்து கொண்டிருக்கும்.
குடும்பத்தோடு சேர்ந்து பண்டிகையை
கொண்டாட முடியாமல் தூரம் தடுத்தது
ஆனால்
ஒரே நாளில் கூட சேர்ந்து கொண்டாட
முடியாமல் போகிற எங்களின் வேதனையை
யாரிடம் சொல்வது..?
சாப்பிட்டியாப்பா என கேட்கிற அம்மாவின் கேள்விக்கு...?
சாப்பிட்டேன் என சொல்லிவிடுவேன்
ஆனால் அடி வயிற்றில்
பசி குடலை கவ்வும்.
வைத்தியம் படித்ததில்லை தான் நான்
ஆனால் ஹலோ என்கிற அம்மாவின்
குரல் கொண்டே அவள் நலம் தானா
என அறிந்து கொள்ளும் மனது..!
அம்மாவின் குரல்
சிறிதாய் மாறுபட்டாலும்
நீங்கள் நலம் தானா என
திரும்ப திரும்ப கேட்பேன்
எத்தனை முறை கேட்டாலும்
நலம் என்றே சொல்வாள்
அது தாய்மையின் குணம்.
தொலைபேசியை துண்டித்த பின்பும்
மனம் கிடந்து படபடக்கும்
அம்மா உண்மையிலேயே
நலம் தானா என்று...
அதிசயங்கள் ஏNழ ஏழு தானாம்
உலகம் வியக்கிறது.
ஆனால் இங்கு நான் சுகமின்றி
கிடந்தால் என் அம்மாவின் உள்
மனசுக்கு தெரிகிறதாம்!
இதைத் தான் எட்டாவது
அதிசயமாய் நினைத்து வியக்கிறேன்.
யார் கேட்டாலும் மறக்காமல் சொல்வோம்
மூவேளை சாப்பட்டிற்காகத்தான் இங்கே
கிடந்து இப்படி கஷ்டப்படுகிறோம் என்று...
உண்மை அதுவன்று
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தான்
அடிமைபட்டு கிடக்கிறோம் என கடைசி வரை
ஒப்புகொள்வதில்லை நாம்.
வானில் விமானத்தின் சத்தம்
கேட்கிற போது எல்லாம்
மீண்டும் எனக்கான பயணம்
எப்போதோ என்று மனம் தவிக்கிறது.
ஊரில் உறவுகளின் விசேஷங்கள்
நடக்கையில் போக மனம் கிடந்து
துடியாய் துடிக்கும்
ஆனால் வங்கி வந்த கடன்
முற்று புள்ளி வைக்கும்.
கல்யாண குறுந்தகடில் ஒவ்வொரு
சொந்தமும் தெரிந்தாலும் தன்
காதலியின் முகம் காணவே கண்கள்
அதிகம் அலைபாயும்.
வாரத்தில் ஒரு நாள் விடுமுறை
அது உடலுக்கு தானே தவிர
உள்ளங்களுக்கு இல்லை.
வியாழக்கிழமை இரவுகளில்
தொடங்கும் எங்கள் சந்தோஷம்
வெள்ளிகிழமை மதியத்தோடு
முடிந்து போகும்.
உறவுகள் யாரும் இறந்து போனால்
தொலைபேசி வழியே கண்ணீரையும்
இரண்டு நாள் விடுமுறையை கொண்டும்
முடித்து வைக்கபடுகிறது எங்கள் துக்கம்.
கடைசியாய் ஒரு முறை அவர் முகம்
காண நினைத்தாலும் போக முடிவதில்லை
நாங்கள் தான் ரியால் நோட்டுகளுக்கு
அடிமைகளாகி போனோமே.
எல்லாம் முடித்து விட்டு திரும்ப
போய் விட வேண்டும் என நினைக்கிறோம்
ஆனால் ஏதோ ஒன்று
எங்களை போகாமல் தடுக்கிறது.
ஒவ்வொரு முறை விடுமுறையில் போகும்
போதும் இனி திரும்ப வர வேண்டாம் என்று
தான் நினைத்து செல்வோம்.
ஆனால்
எங்களுக்கே தெரியாது
அது அத்தனையும் கொண்டு சென்ற பணம்
சில்லறைகளை மாறும் வரை தான் என்று...
வெளிநாட்டு சாமான் என
சிறுவயதிலிருந்தே வியந்து பார்த்த அத்தனையும்
தெருவோர வீதி கடைகளில
மலிவு விலைகளில்...
இங்கு எல்லா தேசத்தின் உணவும்
கிடைக்கிறது
ஆனால் எவ்வளவு அதிகம்
காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டாலும்
கொஞ்சம் கூட இருப்பதில்லை
அம்மாவின் கைருசி போல...
பணம் கொண்டு எதை
எதையோ வாங்கினோம்.
ஆனால் தொலைந்து போன
எங்கள் இளமையை தவிர...
காதலியிடமோ மனைவியிடமோ
அரைமணிக்கொரு முறையோ,
அரை நாளோ,
ஒரு நாள் முழுவதுமே பேசினாலும் கூட
இன்னும் மிச்சமிருக்கிறது வார்த்தைகள்...
அருகிலயே இருக்கும் வரை
எதற்குமே மதிப்பில்லை என்பார்களே
அது உண்மை தான்.
அம்மாவின் பாசம்
தந்தையின் கண்டிப்பு
என உறவுகளின் அவசியத்தை அதிகம்
உணர்த்துகிறது இந்த பிரிவு...
எங்கே போனாலும்
கிடைத்து விடுகிறது நட்பு
ஆனால் தாய் தந்தை பாசம்...?
கை நிறைய கொண்டு போகலாம்
என்று தான் எண்ணி வந்தோம்
ஆனால் இருந்ததையும் தொலைத்து
விட்டுத் தான் போகிறோம்.
உள்ளங்கை அளவு மட்டும்
காசு இருக்கையில்
மனசு நிறைய சந்தோஷம் இருந்தது
ஆனால் கை நிறைய காசு இருந்தாலும்
மனதில் கொஞ்சம் கூட சந்தோஷமில்லை.
ஒன்றுமே இல்லாத போது
மனம் நினைத்தது
என்னிடம் பணம் இருந்தால்
எல்லோர்க்கும் உதவுவேன் என்று
ஆனால்
எல்லாமே இருக்கிற போது
நினைக்கவே மறுக்கிறது மனம்
யாருக்கும் உதவ வேண்டும் என்பதையே...
பொல்லாதது இந்த பணம்
எதையும் மாற்றி விடுகிறது.
திரும்பி ஊர் போக தேதி
குறித்த பின்பு
ராத்திரி உறக்கம் போய்விடும்
பசி கூட சில நேரம் இருப்பது இல்லை
இத்தனை நாள் பம்பரமாய்
சுற்றிய கடிகாரமும்
நாட்களும் கூட
ஆமை போல் நகர்வதாய் தோன்றும்.
இரண்டு வருடங்கள் பொறுமையாய்
இருந்த எங்களால் இந்த சில நாட்கள்
பொறுமையாய் இருக்க முடியவில்லை...
விமானம் மேலே பறக்கத்
தொடங்குகிற முந்தின நிமிடம் வரை
இது கனவா...? நனவா..?
என்று கூட நினைத்திட தோன்றும்
அம்மாவின் கற்பத்தை விட்டு வெளியே
வந்த போது எப்படி இருந்திருக்கும்
தெரியவில்லை.
ஆனால் இப்படித் தான்
இருந்திருக்கும் என நான் உணர்ந்தேன்
விமான நிலையத்திலிருந்து
வெளியே வந்த போது...
வரவேற்பு வாசலில் உறவினற்காக காத்திருக்கும்
அத்தனை விழிகளிலும் தேங்கி நிற்கிறது
ஏக்கம் மட்டும் அல்ல.
கண்ணீரும் தான்
எங்களை கண்டதும் கொட்டி விடுவதற்காக...
என்னையும் கூட்டி போக யார் வந்தது என கூட்டத்தில் என்
விழிகள் தேடும்,
தந்தையை கண்டதும் இருவருக்குமே
வார்த்தைகள் வராமல் அணைத்து கொண்டு வழிகிற
எங்கள் பாச கண்ணீருக்கு முன்னால்
தேடி தேடி வாங்கி சென்ற
அத்தனைக்கும் மதிப்பு குறைவு தான்...